பெண்மை-----மகாகவி பாரதி

பெண்மை

#1
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன
தாயின் பெயரும் சதி என்ற நாமமும்

#2
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா
சூரப் பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம்

#3
வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி அழிப்பது பெண்கள் அறமடா
கைகள் கோத்துக் களித்து நின்று ஆடுவோம்

#4
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான்
பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை
கண்ணைக் காக்கும் இரண்டு இமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திடுவோமடா

#5
சக்தி என்ற மதுவை உண்போமடா
தாளம்கொட்டித் திசைகள் அதிரவே
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர் வியக்கக் களித்து நின்று ஆடுவோம்

#6
உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே

#7
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே
நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண் இடைப் பெண் ஒருத்தி பணியிலே

#8
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம்
காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே

#9
அன்னம் ஊட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும் பொன் கைகளைப் பாடுவோம்!!
    -------மகாகவி பாரதி

Comments

Popular posts from this blog

X std SS PPT Collections TM & EM

6-10 SOCIAL SCIENCE GUIDES