வாழ்வின் சுவை!

வாழ்வு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே மரணமும் சத்தியமானது. எல்லா உடல்களும் மரணத்தின் சுவையை சுவைத்தே தீருகின்றன. “ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது”

சுவை என்றால் என்ன? இனிப்பு, கசப்பு, சிலபோது உவர்ப்பு, இந்த ருசிகளையே நாம் சுவை என்கிறோம். எனவே மரணம் சிலருக்கு இனிப்பாக இருக்கலாம். சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். வேறுசிலருக்கு உவர்ப்பாகவும் இருக்கலாம். வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதன் அடிப்படையில்தான் மரணத்தின் சுவையும் அமையும்.

சுவை எவ்வாறு இருந்தாலும் வாழ்வின் இறுதி முடிவல்ல மரணம். மாறாக வாழ்வின் தொடர்ச்சிதான் மரணம். மறுமை வாழ்வின் விசாலமான கதவுகளை திறந்து தருவதுதான் மரணம். மரணத்துக்கு வரம்புகள் கிடையாது. சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடோ, ஆண்-பெண் என்ற பாகுபாடோ கிடையாது.

மரணம் வந்துவிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்று விடவேண்டியதுதான். நம்முடைய மரணத்துக்காக உலகம் தவித்துப்போகும் என்பதோ, உலகமே அழும் என்பதோ கிடையாது. நமக்காக அழும் ஒருசிலர்கூட கொஞ்ச நாட்கள்தான் அழுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நமக்காகக் கண்ணீர் சிந்தவோ, நம்மைக் குறித்து நினைக்கவோகூட யாரும் இருக்க மாட்டார்கள்.

மனிதனுக்கு அறிவும் தேவை, ஆன்மிகமும் தேவை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும். இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்கும்போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

‘அறிவும் மட்டும் போதும், ஆன்மிகம் தேவையில்லை’ என்று கூறும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கின்றார்கள். ‘ஆன்மிகம் மட்டும் போதும், அறிவு தேவையில்லை’ என்று கூறும் வேறொரு மக்கள் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அறிவும் ஆன்மிகமும் ஒன்றாக இணையும்போதுதான் இறைவழிகாட்டுதலை புரிந்துகொள்ள முடியும். இறைவழிகாட்டுதல்கள், மனிதனை மனிதனுக்கு அழகாக அறிமுகம் செய்து வைக்கும்.

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எப்படி வாழவேண்டும்? என்பதற்கான பதில்களை எல்லாம் இறைவழிகாட்டுதல்கள் மட்டுமே அழகாகச் சொல்லித்தரும்.

மனிதக் கொள்கைகளும், தத்துவங்களும் மாற்றத்திற்கு உள்ளாகும். காலத்தால் மாறலாம். இடத்தால் மாறலாம். மனிதப்பலவீனங்களால் மாறலாம். ஆனால் இறைவழிகாட்டுதல்கள் அவ்வாறல்ல. ஒருபோதும் மாறாதவை.

மேலை நாடுகளைப் பாருங்கள். வசதியற்ற மக்களுக்கு அரசே உணவு கொடுக்கிறது. வேலை கொடுக்கிறது. வருமானத்திற்கு வழி செய்து கொடுக்கிறது. எல்லாம் கிடைக்கிறது. எல்லாம் கிடைத்த பின்பும் கவலையும், விரக்தியும் மக்களைப் பீடித்திருக்கின்றன.

எல்லாம் கிடைத்த பின்னரும் மணவிலக்குகள் பெருகின. எல்லாம் கிடைத்த பின்னரும் பெற்றோர் இல்லாத குழந்தைகள் பெருகினர். எல்லாம் கிடைத்த பின்னரும் ஆதரவற்ற நிலையில் விடப்படும் பெற்றோர்கள் பெருகினர். எல்லாம் கிடைத்த பின்னரும் ஓராயிரம் பிரச்சினைகள் பெருகிக்கொண்டே போயின. இறுதியில் மனிதன் திகைத்து நிற்கின்றான்.

ஆக, மனிதனுக்குத் தேவை இறைவழிகாட்டுதல் அடிப்படையிலான வாழ்க்கை. அந்த வாழ்க்கைதான் மனநிம்மதியைத் தரும்.

Comments

Popular posts from this blog

X std SS PPT Collections TM & EM

6-10 SOCIAL SCIENCE GUIDES